Thursday, May 7, 2009

நளபாகம்

வெட்டியா வீட்லதான இருக்கோம். சமையல் எதாச்சும் இன்னைக்கு ட்ரை பண்ணி பாக்கலாமேன்னு ஒரு ஐடியா. இன்னைக்கு என்ன சமையல் னு எங்க வீட்டு அம்மணி கிட்ட கேட்டேன். Vegitable rice. சரி .. அந்த கழுதைய நாமளே பண்ணுவோம்னு களத்துல இறங்கிட்டேன்.

செய்முறை - 3 பேருக்கு ( என்னை மாறி சாப்பிடுறவங்களுக்கு )

அரிசி - ஒண்ணேகால் ஆழாக்கு
தண்ணீர் - 500ml
காரட் - 3
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி (ஊற வைத்தது ) - ஒரு ஆழாக்கு
வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு அரைத்தது - 1 டீஸ்பூன்
எண்ணை - 3 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

முதலில் அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். நாம parallel அடுத்த வேலை பாக்கலாம். குக்கர் அடுப்பில் வைத்து நெய்யையும் எண்ணையையும் ஊற்றவும். சிறிது சூடான பிறகு சோம்புவை பொரித்துக்கொள்ளவும் .மசாலா பொருட்கள் அதாவது பட்டை, ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலை இவற்றை துண்டாக்கி வறுக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கிளறிவரவும்.நீட்டு நீட்டாக cut பண்ணிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் பச்சை மிளகாய்,சிறியதாக கட் பண்ணிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு cut பண்ணிய காரட்,பீன்ஸ் மற்றும் ஊறவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து கிளறிவிடவும். தேவைகேற்ப மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.ஊறவைத்த அரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். தண்ணீர் ஊற்றி cooker மூடி 2 விசில் வரை வேகவிடவும். டோட்டோடைங்க்க்க்... veg rice ரெடி.






மொத்த நேரம் 30-40 நிமிடங்கள் .

இதிலிருந்து நமக்கு கிடைக்கும் நீதி.

1. என்னைக்காவது நாம் சமையலை ஏற்றுகொண்டால் வீட்டு அம்மணிக்கு ரொம்ப சந்தோஷம். அடுத்தவங்களை சந்தோஷ படுத்தி பார்ப்பதுதானே நமக்கு சந்தோஷம் . ( என்ன கொடுமை சரவணன் இது ...)

2. "சமையல் பண்ணுறது ரொம்ப கஷ்டம். நீங்க வேணும்னா சமைச்சு பாருங்களேன்" அப்படின்னு அவுங்க விடுறதுலாம் பீலா. உண்மையிலே ரொம்ப easy.

Thursday, April 30, 2009

தாயுமானவள்

உனது பார்வையில்
கொஞ்சமே போதும்தான்..
சிகரங்களை தொடுவதற்கு .
ஆனாலும்
தோற்கவே விரும்புகிறேன்
எனது தாயின்
அரவணைப்பிற்காக ...

சொர்க்கத்தின் வாசலை
திறந்து காட்டியவள் நீதான்..
ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால்..
எனக்கு உயிர் கொடுத்தவள்
நரகத்தின் ஜுவாலைகளை
(எனக்காக) தின்றவளாயிற்றே...

ஒரு கையில்
தென்றலையும்
மறு கையில்
உன்னையும் கோர்த்து
கடற்கரை மணலில்
கால்புதைய நடக்கும்
சுகம் மட்டுமே போதும்தான்..
ஆனால்..
என்னை உயிரில் சுமந்து
உடம்பை கரைத்து
முட்களில் நடந்தவள்
என் தாயல்லவா?

நீ வேண்டுமானால்
உனதன்பை
என்
இதயத்தின் உட்சுவற்றில்
கிறுக்கிஇருக்கலாம்...
ஆனால்
இரத்தத்தாலும்
சதையாலும்
என்னையே
செதுக்கியவள் முன்னால்
நீ எம்மாத்திரம்?

Tuesday, April 28, 2009

வெயில் ...

என்ன வெயில்?.. என்ன வெயில்??...
உச்சி மண்டை தீய்ந்து புகை வந்துகொண்டிருக்கிறது...
வேலை செய்ய bore அடிச்சாலும் AC க்காகவாவது office போய்த்தான் ஆகவேண்டும். இளநீர், தர்பூசணி,கடற்கரை காற்று, இரண்டு அல்லது மூன்று குளியல். எப்படியாவது ஓட்டிவிடவேண்டும்.

நமக்கு ஆயிரம் வழிகள்.

வருடத்திற்கு 10 inch க்கும் குறைவாகவே மழை பெய்யும் பாலைவனத்தில் இருக்கும் மிருகங்கள் என்னதான் செய்யும்?

இதற்கும் வழிவகை செய்து இருக்கிறது இயற்கை.

தண்ணீருக்கு cactus என்று சொல்லப்படும் சப்பாத்திக்கள்ளி.

தரையடியில் வளை தோண்டி வாழும் எலி இனம் அதிகமான வெப்பம் இருக்கும் போது வளையின் வாய்புத்தை மூடிவிடும்.

ஆந்தை வாயை திறந்து தனது இறக்கையால் விசிறி தொண்டையை சூடாற்றிக்கொள்ளும்.

அங்கே வாழும் முயல்களுக்கு நீண்ட பெரிய காதுகள். அதில் உள்ள இரத்த நாளங்கள் வழியாக உடல் சூடு வெளியேறிவிடும்.

இயற்கையாகவே அங்கு வாழும் விலங்கினங்கள் வெளிறிய நிறம் உடையவை. வெளிறிய நிறங்கள் சூட்டை கிரகிப்பதில்லை.

ஆனால் வல்லூறோ கருமை கலந்த பழுப்பு நிறம். அவை என்ன செய்யும்?

தனது கால்களை சிறுநீர் கழித்து ஈரமாக்கிகொள்ளும். இதனால் அங்கே உள்ள இரத்தம் குளிர்வடைந்து உடல் முழுதும் பரவி வெப்பத்தை தணிக்கும்.


ம்ம்ம்ம்ம்...

எனக்கென்னவோ நமக்கும் வல்லூறு வழிதான் சிறந்தது என தோன்றுகிறது.

Sunday, April 26, 2009

ராகு காலம்

எத்தனை பேருக்கு இன்றைக்கு எத்தனை மணிக்கு ராகு காலம் என்று காலண்டரை பார்க்காமல் சொல்ல முடியும்?

தெரிந்தவர்கள் அடுத்த பதிவை படிக்கலாம் .

தெரியாதவர்களுக்கு கிழே ஒரு வரி பாடல் ..

'திருவிழா மயத்தில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா?'

திருவிழா - தி - திங்கள் - 7.30 - 9.00
மயத்தில் - - னி - 9.00 - 10.30
வெளியே - வெ - வெள்ளி - 10.30 - 12.00
புறப்பட்டு - பு - புதன் - 12.00 - 1.30
விளையாட - வி - வியாழன் - 1.30 - 3.00
செல்வது - செ - செவ்வாய் - 3.00 - 4.30
ஞாயமா - ஞா - ஞாயிறு - 4.30 -6.00


ராகு காலம் மொத்தம் ஒண்ணரை மணி நேரம். 7.30 மணிக்கு ஆரம்பித்து 1.30 மணிகளாக கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும்.

அவ்வளவுதான்.

Friday, April 24, 2009

கதையல்ல நிஜம் !

"ஐயோ...ஐயோ.. என் தலைல கல்ல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டாளே... நான் என்ன பண்ணுவேன். யாராவது ஓடியாங்களேன்.. நான் என்ன பண்ணுவேன்".

"என்ன அங்க சத்தம்..."

"என்னடி ஆச்சு... "

"பாருங்க... பாழா போனவ தூக்கு மாட்டிகிட்டா. "

"அய்யய்யோ...என்னடி கொடும இது... ஏண்டி இப்படி பண்ணின..."

"யாராவது ஆம்பளைங்க இருக்காங்களா பாருங்க வெளில...யாராவது வாங்களேன்... "

"கீழ இறக்கு மொதல்ல. பாத்து..."

"தூக்க முடியலியே.."

"இந்தா.. அப்படியே கால பிடி....மெதுவா மெதுவா..."

"டேய் டேய்.. இரு.. இரு.. அந்த ஸ்டூல நிமித்தி போட்டு மேல ஏறி பிடிச்சுக்கோ..."

"ம்ம்ம்.. மெதுவா... அப்படியே சாய்ச்சு உக்கார வைங்க..."

"மூச்சு இருக்கா பாரு..."

"இப்படி பண்ணிட்டு போயிட்டியேடி படு பாவி.. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்.."

"யாராவது துணி எடுத்து மூஞ்சிய தொடைங்க... நொரையா வழியுது பாரு."

"ஏய் பாப்பா.. நீ வெளில போய் வெளையாடு.... போ னு சொல்றேன்ல."

"கார் எடுத்துகிட்டு வர சொல்லுங்க... ஆஸ்பித்திரிக்கு போலாம்.."

"இனிம போயி என்ன பண்ணுறது.. அதன் போய்டுச்சே எல்லாம்.."

"ஏண்டி இப்படி பண்ணினா இவ..."

----------------------------------------------------------------------------------------

"என்ன? பயமா இருக்கா?"

"........"

"என்னாச்சு சொல்லு. இம்மாந்தூரம் வந்துட்டு பேசாம இருந்தா?"

"நான் ட்யூஷன் போயிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருப்பாங்க எங்க வீட்ல."

"ம்ம்ம். அதுக்கென்ன இப்ப.? அது தெரிஞ்சதுதான."

"எனக்கு பயமா இருக்கு."

"நீ வேணா போயிடுறியா"

"இல்ல..நான் போல."

"இதுலாம் மின்னாடியே பேசனதுதான? அப்போ தலையாட்டிட்டு இப்போ பயமாருக்குன்னா? ரிஜிஸ்டார் உக்காந்துருக்கார். வா போலாம்."

"தாலி வச்சு இருக்கியா?"

"ஆமாம். இங்க கையெழுத்து போட்ட உடனே கோயிலுக்கு போறோம்."

"அங்கலாம் வேணாம். பயமா இருக்கு. இங்கயே கட்டிக்கலாம்."

"கட்டிக்கிட்டு வீட்டுக்கு போம்போது அவுத்து வச்சுடுவியா? அப்புறம் எதுக்கு இப்படி பயந்து சாவுற?"

"தோ பாரு. ரொம்ப அலட்டாத. அவ்ளோ பயம் இருந்த இங்க ஏன் வரேன்.
பின்ன என்ன?"

"எப்படியும் முழு பரிட்ச முடியற வரைக்கும் எங்க வீட்லதான் நான் இருந்தாகணும்.அதுவரைக்கும் எப்படி தெரியாம பாத்துகறதுதான்னுதான்."

"சரி.தாலி வேணாம். கையெழுத்து மட்டும் போட்டுட்டு நீ போ.. மத்ததெல்லாம் உனக்கு பரிட்ச முடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்."

"ம்ம்ம்.."

"யாரு.. நீங்கதான் பொண்ணு மாப்ளையா? மாலை கூட வாங்கலியா?"

"இல்ல சார். கோயில்ல போட்டுக்கலாம் னு இருந்தோம்."

"வீட்ல யாருக்கும் தெரியாதா?"

"தெரியாது சார்."

"ஏன்மா...சாதி உட்டு சாதி மாறி கல்யாணம் பண்ணிகிறிங்க.. உங்க அப்பன் என்ன வெட்டிட போறார்.சரி சரி..இங்க கையெழுத்து போடுங்க..நீயும் இங்க போடுப்பா."

"ம்ம்ம்.. ம்ம் . நல்ல இருங்க..யாருப்பா சாட்சி கையெழுத்து?"

"இங்க போடுங்க.."

------------------------------------------------------------------------------------

"எல்லாம் அந்த கொலைகார பாவியால வந்தது....கட்டைல போக... அவனுக்கு என் பொண்ணுதான கெடைச்சா..."

"என்னாதாண்டி ஆச்சு... ஏதாவது திட்டுனியா.."

"ஆமாம் நீ வேற.. அவள போய் நோண்டி நோண்டி கேட்டு கிட்டு...ஊருக்கே தெரிஞ்சு போச்சு...அந்த கட்டையன் மவனும்,தோ மாட்டிகிட்டாளே இவளும் திருட்டு கண்ணாலம் பண்ணிகிட்டாங்க."

"அம்மாடி... யாரு...நம்ம பஞ்சாயத்து தலைவர் வீட்ல பண்ணை வேல செய்றானே அந்த கட்டையன் மவனையா சொல்றே."

"ம்ம்ம்.. அந்த தடிப்பயதான்....கெராப்பு வெட்டிகிட்டு அவன் சைக்கிள் ல சுத்தும் போதே தெரியும் இப்படி ஏதாச்சும் பண்ணுவான்னு."

"அந்த கம்னாட்டிக்கு எங்கேயிருந்து வந்துச்சு இவ்ளோ திமிரு...."

"அவன விடு.. அவன்தான் அப்படின்னா இந்த மூதேவிக்கு எங்க போச்சு புத்தி?"

"நீ வேற.. இருடி.. இவளே பொண்ண பறிகொடுத்துட்டு நிக்குறா... இப்ப போய் திட்டிகிட்டு..."

"திட்டட்டும் ஆத்தா... அவங்க சொல்றது சரிதானா...இவளுக்கு எங்க போச்சு புத்தி... நாங்க இவளுக்கு என்ன கொறை வச்சோம்...
கேட்ட துணி மணிலாம் வாங்கி குடுத்தேன்... படிக்கணும்னா .. பஸ் ஏத்தி போய் பட்டி னு அனுப்ச்சி வச்சேன்..இப்படி ஓடுகாலிய வந்து நிப்பான்னு தெரியாம போச்சே.... தெரிஞ்ச உடனே வெளக்குமாத்தால ரெண்டு போட்டேன்...கோவம் வராதா?இனிமே நான் எப்படி ஊரு மொகத்துல முழிப்பேன். என் ஊட்டுக்கு சாணி வார்ற பயலாம் என்ன மொறை சொல்லி கூப்பிடுகிட்டு வருவானுங்களே... தோட்டத்துப்பக்கம் போயிட்டு வரதுக்குள்ள இப்படி ப்பன்ணிகிட்டளே படு பாவி..
ஆயுசுக்கும் எங்கள தல நிமிர உடாம பண்ணிட்டாளே..."

"சரி.. சரி.. உடும்மா... என்னமோ நேரம்..விதி.. யாரு உயிரை யாரு புடிச்சு வைக்க முடியும்."

"அந்த பொறுக்கி பரதேசிய கொன்னாதான் என் கோவம் தீரும்.."

"அட.. நீ வேறப்பா... அவன கொன்னாக்கா உன் மொவ வந்துடுவாளா?... ஆக வேண்டியத பாருங்க.."

"எவனோ போலீஸ் ல சொல்லிட்டான் போலருக்கு... போஸ்ட்மார்டம் பண்ணனும்குறாங்க..."

"அய்யோ ... வேணாம் சார்... முழுசா உயிரோடதான் இல்ல. முழுசா போதைக்கவாவது உடுங்க சார்."

"நான் என்னமா பண்ண முடியும்...இந்த வழியாதான் ஏசி போய்ருகாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. அவருதான் என்ன அனுப்பினாரு... நீங்க ஒண்ணும் கவலை படாதிங்க... இதெல்லாம் பார்மாலிட்டி. ரொம்ப ஒண்ணும் சேதம் இல்லாம பாத்துக்கலாம். கொஞ்சம் காசு செலவு பண்ணினா கேசு ஏதும் இல்லாம பண்ணிடலாம். தவறி உழுந்துதான் செத்து போச்சுன்னு எழுதி குடுத்துடுவார். எனக்கு தெரிஞ்சவர் தான்..பாத்துக்கலாம். அந்த சைடு ஆளுங்கள நான் பாத்துகறேன்.."

----------------------------------------------------------------------------------------

இதற்கப்புறம் எல்லா செயல்களுமே இயல்பாகத்தான் நடந்தது...தீயின் கோர பிடியில் அவளது தேகம் போசுங்கிக்கொண்டிருந்தது..அவளது தந்தையின் கண்களில் இருந்த வெறுமைக்கு மட்டுமே தெரியும் அந்த உண்மை...

அது தற்கொலையல்ல என்பது..

Thursday, April 23, 2009

இன்று பாரதி ...

சிவப்பாய் எரியுது மனசு - சுதந்திரம்
கனலாய் வீசுது புதுசு
கருப்பாய் போனது தேசம் - உள்ளம்
கரியாய் போனது சோகம்
சுவாசிக்கும் காற்று பிணவாடை வீசும்
நேசிக்கும் மனசில் இரத்தசுவை கூடும்
பூசிக்கும் பூக்களும் ஜாதிமணம் கமழும் -ஏனோ
வேசிக்கு மட்டும் பாரதி பொருந்தும்

சாதிகள் இல்லையடி பாப்பா!

Monday, April 20, 2009

குழ(த)ந்தை

உச்சி வெயில் ஒற்றைக்கால் தவமிருக்க வேண்டும்
ஒவ்வொன்றாய் வியர்வைத்துளி சேகரிக்க வேண்டும்
மூச்சுவாங்க ஓடிவந்துன் பாதம்தொட வேண்டும்
ஒவ்வொன்றாய் உன்விரல்கள் நான்துடைக்க வேண்டும்

மழைத்துளி வாயடைக்கி கடலாழம் செல்ல வேண்டும்
உன்மூச்சே என்மூச்சாய் மனம்லயிக்க வேண்டும்
மூச்சுமுட்ட வெளியேவந்து உன்முகம்காண வேண்டும்
முழுசாக என்முத்தை நானேதர வேண்டும்

ஒருகோடி மின்மினிகள் நான்பிடிக்க வேண்டும்
உன்முகமதிலே மின்னுவதை நான்ரசிக்க வேண்டும்
குறிஞ்சிப்பூ மெத்தையிட்டு நீஉறங்க வேண்டும்
உன்புன்னகையே ஞாபகமாய் நான்இறக்க வேண்டும்

இரவுமுழுதும் உன்னருகில் கண்முழிக்க வேண்டும்
உன்கனவுகளை மயிலிறகால் நான்வருட வேண்டும்
மீண்டும் ஒருபிறவி நீ பிறக்க வேண்டும்
உன்னைஎன் கருவறையில் நான்சுமக்க வேண்டும்.